மாமன்னன் ராஜராஜ சோழன்

அண்ணாமலை சுகுமாரன் புதுச்சேரி


சொல்லச்சொல்ல அலுக்காத சில சங்கதிகளில் இராஜராஜனின் வரலாறு பற்றிய குறிப்புகளும் முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது.இன்றோ அந்த மாமன்னனின் 1025 வது சதய திருநாள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறு எந்த மன்னனின் பிறந்த நாளாவது உலகில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கொண்டாடப்படுகிறதா ? என்பது மிகப்பெரிய ஒரு அதிசயமான கேள்விதான்.அதுவும் இந்த மாமன்னனின் பிறந்தநாள் கல்வெட்டுகளின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒன்று.

இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் கூறுவதாக  முனைவர்  சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

29 ஆட்சி புரிந்த ஆண்டுகளில் எத்தனையோ போர்கள் வென்ற மன்னர்களின் எண்ணிக்கையோ முப்பதுக்கும் மேல்; இத்தனை போர்கள் நடந்தாலும் சோழநாடுஅவரின் ஆட்சியில்  செல்வ செழிப்பில் தவழ்ந்தது. வணிகம் முன் எப்போதும் இருந்திராத அளவு வளர்ந்திருந்தது. மக்கள் மிக மகிழ்ச்சியாகஇருந்திருக்கின்றனர்.பெண்கள் உரிமைபெற்று அதிகாரிச்சிகளாக அதிகாரம் செலுத்தி இருந்திருக்கின்றனர்.பெண்களின் உயர்வுதானே நாகரீக வளர்ச்சியின் அளவு கோள்.

இராஜ ராஜனே ‘ஜன நாதன்’ என பெயர் சூட்டி மக்கள் நாயகமாக, மக்கள் தலைவராக பெருமையுடன் இருந்திருக்கிறார். கலைகள் வளர்ந்தன. நாடெங்கும் பல புதிய கோயில்கள் கட்டப்பட்டன.அத்தனைகலைகளும் சிறப்பாக வளர்ந்தன. மறைந்து கிடந்த தேவாரம் தேடி திருப்பிப்பெறப்பட்டது.தேவாரப்பாடல்களுக்கு பண்கள் வகுக்கப்பட்டன.வென்ற நாட்டில் கூட பல கோயில்கள் கட்டினார்.

கன்னியாகுமரியில் ராஜராஜேஸ்வரம் என்று முதலில் ஒரு கோயில் கட்டியதாக வரலாற்று அறிஞர் முனைவர் பத்மநாபன் ஆராய்ந்து கட்டுரை எழுதி இருக்கிறார்.இப்போதும் அந்தக்கோயில் கன்னியாக்குமரியில், சிறப்புடன் வழிபாட்டில், கர்ப்பகிரகத்தை அடைத்துக்கொண்டு பெரிய லிங்கத் திருஉருவுடன் இருக்கிறது.எதையும் பெரிதாக செய்வதுதானே இந்த பெரு உடையாரின் பாணி.

இவரின் ஆட்சியில் நாடெங்கும் நிலங்கள் அளக்கப்பட்டன அதற்க்கு ஏற்றபடி முறையாக வரி விதிக்கப்பட்டது . கிராமங்களில் ஜன நாயகம் பலமாக இருந்தது. கிராம ராஜ்யம், நியாயமான தேர்தல், முறையான ஆட்சிக்கு வாரியங்கள், நிலையான ராணுவம் இத்தனையும் கொண்டு ஆட்சிமுறை வேரில் இருந்து ஆரம்பித்து  ஆழ்ந்து  நிலைத்திருந்தது.

இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி:

“ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந்
தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி
வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும்
தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்
திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர்
ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே
செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்”

உண்மையில் மெய்யான கீர்த்திகளை முறையாகக் கூறும் முறையை இந்த மாமன்னனே முதலில் ஏற்ப்படுத்தினான். இதற்க்கு முன் மன்னர்களில் பெருமையை கற்பனையாக புராணத்துடன் இணைத்து கூறப்படும் முறையே இருந்தது. இவரே உண்மையான சரித்திர சம்பவங்களை வருடக்கிரமமாக கூறும் முறையை வழக்கத்தில் கொண்டுவதார். வெற்றிகள் நீள நீள மெய்கீர்த்திகளின் நீளமும் வளர்ந்தது .

இவரின்  ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இம்மன்னனது நான்காம் ஆண்டு முதல்   கல்வெட்டுக்களில் காணப்படும், ‘காந்தளூர்ச் சாலை கலமறுத்த’ என்ற பட்டத்தால்இது  விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராஜராஜனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும் பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.அப்போது பல கோயில்களை இராஜராஜன் அந்தப்பகுதியில் எழுப்பியிருக்கிறார் .

இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவர்  முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலைநாட்டினார்  என்று கூறுகிறது. தஞ்சையில் இராஜராஜ சோழன் எழுப்பிய சீரிய  கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவருடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்’ என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இவரின் பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன.

இராசரானின் சிறப்புப்பட்டங்கள்:

1. இராசகண்டியன்
2. இராசசர்வக்ஞன்
3. இராசராசன்
4. இராசகேசரிவர்மன்
5. இராசாச்ரயன்
6. இராசமார்த்தாண்டன்
7. இராசேந்திரசிம்மன்
8. இராசவிநோதன்
9. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்
11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மொழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்
21. செயங்கொண்டசோழன்

இவை இல்லாமல் இன்னமும் பல இருந்திருக்கலாம். அதற்க்கான சில ஆதாரங்களை நான் சமீபத்தில் சில ஊர்களின் பெயரில் கண்டேன்.

மாமன்னன் இராசரானின் மனைவியர்

1. ஒலோக மகாதேவி – (தந்திசக்தி விடாங்கி) பட்டத்தரசி
2. சோழ மகாதேவி
3. அபிமானவல்லி மகாதேவி
4. திரைலோக்கிய மகாதேவி
5. பஞ்சவன்மகாதேவி
6. பிருத்திவிமகாதேவி
7. இலாடமகாதேவி
8. மீனவன் மகாதேவி – பாண்டிய நாட்டு இளவரசி
9. வானவன் மகாதேவி – இராசேந்திர சோழனின் தாய்
10. வில்லவன் மகாதேவி- சேர நாட்டு இளவரசி
11. வீரநாராயனி

இத்தனை மனைவிகள் இருந்தாலும் இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரன் விளங்கியதும் ஒரு அதிசயம் தான்.இன்னமும் சொல்லப்போனால் சொல்லிக்கொண்டே போகலாம், அத்தனை தகவல்கள் தன்னைப்பற்றி விட்டு சென்றிருக்கிறார் இந்த மாமன்னன்.இந்த மன்னனைப் போல் பெண்களை மதித்தவரை சரித்திரத்தில் காண்பது அரிது.அக்கன் கொடுத்தது என வாஞ்சையுடன் அழைக்கும் பாங்கு ஒன்றேப் போதுமே.

இவருக்கு வழங்கி இருக்கும் இத்தனைப் பட்டபேர்களுடன் மேலும் இரண்டை நான் சமீபத்தில் விருது நகர் மாவட்டத்தில் சுற்றியபோது கண்டேன்.அவர் மகன் கங்கை கொண்டான் என்று அழைக்கப்பட்டது போல் இந்த மாமன்னன்  “கொல்லம் கொண்டான்” என்று அழைக்கப்பட்டிருக்கிறார். ‘அய்யன் கொல்லம் கொண்டான்’ என்ற  பெயரில் கொல்லம் செல்லும் சாலையில் ராஜப்பாளையம்  வட்டத்தில் ஒரு ஊர் இன்றும் இருக்கிறது.

மேலும் இலங்கையில் இருந்து இறை பெற்று தஞ்சை பெரிய கோயிலுக்கு கொடையாகத் தந்த தகவலுக்கு சான்றாக “ஈழம் திரை கொண்டான்” என்ற பெயரில் ஒரு ஊர் இன்னமும் அந்தப்பகுதியில் இருக்கிறது. ஆனால் அது திரிந்து ‘இளந்திரை கொண்டான்’ என வழங்குவதாக அப்பகுதி அறிஞர்கள் கூறுகின்றனர் .

இன்னும் எவ்வளவோ இம்மன்னனைப் பற்றி கூற இருக்கிறது. பத்து வயதில் பொன்னியின் செல்வன்  படித்து எழுந்த ‘அருண்மொழி’ பற்றிய ஆர்வத்தீ இந்த அறுபதிலும் சற்றும் குறையவில்லை. உண்மையில் தமிழ்நாட்டின் சின்னமாக, அவதார புருசனாக, மண்ணின் மைந்தனாக, மக்களின் கதாநாயகனாக யாராவது அறியப்பட வேண்டுமானால் அதற்கு இராஜ ராஜனை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் …?

சிறப்பு நன்றி :

மாமன்னன் ராஜ ராஜ சோழன் பற்றிய பல அரிய தகவல்களை இணைய உலகிற்கு அறிய தந்த அய்யா.திரு. அண்ணாமலை சுகுமாரன் ( புதுச்சேரி) அவர்களுக்கு தேவர்தளத்தின் நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.

This entry was posted in சோழன் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *