பூவாலைக்குடியில் 23 மறவர் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருச்சி, அக். 12: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூவாலைக்குடி கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 புதிய கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.
திருச்சி, அக். 12: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூவாலைக்குடி கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 புதிய கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, அந்த மையத்தின் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சாலையிலுள்ள வையாபுரிக்கு அருகேயுள்ளது பூவாலைக்குடி என்னும் சிற்றூர். இங்குள்ள புஷ்பவனேசுவரர் கோயில், கருவறை மட்டுமே கொண்ட முத்தரையர் காலக் குடைவரைக் கோயிலாகும். சோழர் காலத்தில் இக்குடைவரையின் முன் முகமண்டபம் அமைக்கப்பட்டது.
பிற்பாண்டியர் காலத்தில் பெருமண்டபமும், விஜயநகர அரசர்களின் ஆட்சிக் காலத்தில் முன்மண்டபமும் கட்டப்பட்டன. குடைவரைக் கோயிலின் தென்புறத்தில் இரண்டாம் பாண்டியர் கால அம்மன் கோயிலும், வடபுறத்தில் முருகன், பைரவர், சண்டேசுவரர் திருமுன்களும் (சன்னதிகளும்) அமைந்துள்ளன. இக்கோயில் வளாகத்திலிருந்து பதினைந்து கல்வெட்டுகள் ஏற்கெனவே படியெடுக்கப்பட்டுள்ளன.
சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு. நளினியின் தலைமையில் இக்குடைவரையில் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆர்வலர்கள் 23 புதிய கல்வெட்டுகளைக் கண்டெடுத்தனர்.
அவற்றுள் வீரராஜேந்திர சோழர் காலக் கல்வெட்டு, கூடலூர் நாட்டுப் பூவாலைக்குடியைச் சேர்ந்த தென்னவதரையன், இக்கோயிலில் இரவும், பகலும் எரியுமாறு நந்தாவிளக்கு ஏற்றுவதற்காக இருபத்தைந்து பசுக்களைக் கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்ததாகக் கூறுகிறது. அப்பசுக்களைத் தம்பொறுப்பில் ஏற்றுக் கொண்ட சுந்தரசோழக் கோன் உரிய நெய் கொண்டு தொடர்ந்து விளக்கேற்ற ஒப்புக்கொண்டார்.

முகமண்டபத் தூண்களில் காணப்படும் கல்வெட்டுகள் அவற்றைக் கொடையளித்தவர்களாகப் பனைந்தலை மறவன் முப்பேருடையானையும், பூவாலைக்குடி மறவன் பெரியநாசி சதிராண்டியையும் அடையாளப்படுத்துகிறது.
பெருமண்டபத் தூண்களில் காணப்படும் ஐந்து கல்வெட்டுகளுள் மூன்று, சுந்தர சோழபுரத்தைச் சேர்ந்த கண்ணனூருடையார் திருமேனியார் கொற்றப்பிள்ளை பூவனூர்க் கிழவர் அத்தூண்களைத் தந்த தகவலைச் சொல்கிறது.
மண்டபக் கூரையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள நாயகப் பத்தியில் போடப்பட்டிருக்கும் கற்களுள் ஏழினையும், மண்டபத்தில் காணப்படும் போதிகையையும் இப்பூவனூர்க் கிழவரே கொடையளித்திருப்பதாக மற்றொரு கல்வெட்டுக் கூறுகிறது.
திங்கள்தோறும் நடக்கும் கோயில் சிறப்புப் பூஜையின்போது கிழவரின் இந்த அரிய பணிகளைப் பாராட்டித் தீர்த்தமும், திருநீறும் கோயில் மரியதையுடன் அளிக்கப்பட்டன.
மண்டபத்திலுள்ள மற்றொரு போதிகையைத் தந்தவராகச்சுந்தரசோழபுரத்துக் கண்ணனூருடையான் பொன்னாண்டான் சிவந்தெழுந்தார் அறிமுகமாகிறார். 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகக் கொள்ளத்தக்க இக்கல்வெட்டுகள் அனைத்தும் பூவாலைக்குடிக் கோயிலின் முகமண்டப, பெருமண்டபக் கட்டுமானங்களில் பங்கெடுத்துக் கொண்ட பேராளர்களை அறிமுகப்படுத்துவதுடன், கோயில் கட்டுமானம் சார்ந்த உறுப்புகளின் பெயர்களையும் தருகிறது.
முன்மண்டபத்தில் காணப்படும் தூண் கல்வெட்டுகள் பூவாலைக்குடி அப்பபட்டர் ஆடும் பெருமாளும், முப்பிரபாலன் மனச்சாரும் இக்கோயிலில் எப்போதும் வழிபட்டிருப்பதாகக் கூறுகின்றன.எழுத்தமைதி அடிப்படையில் இக்கல்வெட்டுகளைப் பதினாராம் நூற்றாண்டுக்குரியனவாகக் கொள்ளலாம்.
முகமண்டப வாயிலின் மேல்நிலையில் காணப்படும் பதினான்காம் நூற்றாண்டுக் கல்வெட்டு அத்திருநிலையைச் செய்தளித்தவராகப் பந்தனைஇளமகன் குப்பை சுந்தரன் செருந்திமலை நாடாள்வானைக் குறிக்கிறது. பெருமண்டப வாயிலின் மேல்நிலையில் காணப்படும் கல்வெட்டு,கோவனூர் மறவரில் சூரியதேவர் பூவாலைக்குடி ஆண்டார் முறபாடு கொடார் என்பார் அத்திருநிலையையும் முகவணையையும் செய்தளித்தாகக் கூறுகிறது.   
வாயில் முகப்பை அலங்கரிக்கும் அமைப்பையே இக்கல்வெட்டில் இடம்பெறும் முகவணை என்ற சொல் குறிக்கிறது. மிகஅரிதாகக் கல்வெட்டுகளில் காணப்படும் இச்சொல் குடுமியான்மலையில் கண்டெடுக்கப்பட்ட புதிய கல்வெட்டு ஒன்றிலும் இடம்பெற்றுள்ளது.   பூவாலைக்குடியில் கோயில் விரிவாக்கத்தில் சுற்றுப்புற மக்கள் ஆர்வத்தோடு தங்களை இணைத்துக் கொண்டமையை இப்புதிய கல்வெட்டுகள் வெளிப்படுத்துவதாகக் கூறுகிறார்இரா. கலைக்கோவன்.

அருள்மிகு மலைவளர் காதலி உடனுறை இராமநாதர் கல்வெட்டு:

கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் வீரபாண்டிய தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவன் இவர்கள் காலங்களிலும், விசயநகர மன்னர்களில் விசுவநாத நாயக்கர் வீரப்ப நாயக்கர் காலங்களிலும், வீரபூபதி காலத்தும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.இவைகள் சகம் 1530 அதாவது கி. பி. 1608 இல் வீரபூபதி நாளில் இராமநாதர் கோயில் கட்டி முடிந்ததையும்; சகாப்தம் 1540 இல் அதாவது கி.பி. 1618இல் சேதுபதிகாத்த தேவர் புத்திரன் தளவாய் தேவன் குலசேகரனான சேதுபதிகாத்த தேவர், இறைவர் திருவிழாவிற்கு எழுந்தருளியிருக்க மண்டபம் ஒன்றைக் கட்டியதையும், சகாப்தம் 1540இல் சேதுபதிகாத்த தேவர் இராம நாதசுவாமி கோயிலின் முதற் பிரகாரம், திருநடமாளிகைப்பத்தி, ஆருட மண்டபம் கட்டியதையும், சகம் 1390 அதாவது 1468இல் பருவதவர்த்தினி அம்மன் கோயிலின் முன்புள்ள கொடிமரம் செய்து நிறுத்தி வைக்கப்பெற்றதையும் உணர்த்துகின்றன.(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1903 No. 97-105, year 1905 No. 89-90, year 1915 No. 8-9. See also South Indian Inscriptions, Vol. VIII No. 3823 – 91.)இக் கோயிலிலுள்ள கல்வெட்டுப் பாடல்கள்: (கட்டளைக் கலித்துறை)(1) சேல்கண்ட வாரியிலிங்கேசற் செய்பழி தீரமுன்னாள் மால்கண்ட கோயிலிராமீச ராடல்செய் மண்டபத்தை நூல்கண்ட நற்சக னாயிரத் தோடைந்து நூற்றிருபான் மேல்கண்ட நாளின் முனிராம நாதன் விதித்தனனே.

(2) திருமா லரனுக் கபிடேகஞ் செய்யச் சிலையதனால் வருமாறு கண்டவன் கோடிப் புனற்கு மகாலயத்தைத் தருமாயி ரத்தைந்து நூற்றுமுப் பான்செல் சகன் வருடத் தருமா தவம்செய் முனிராம நாதன் அமைத்தனனே.

(3) பற்றுஞ் சகனிற் பதினைந்து நூற்றுமுப் பான்மருவ நற்றும் புவியினை யாள்வீர பூபதி நாளிற் றொண்டர் குற்றங் கடிந்த வரராம நாயகர் கோயிலன்பான் முற்றுந் தவங்கள் புரிராம நாதன் முடித்தனனே.

மரம்: வில்வம்
குளம்: அக்கினி, இராம, இலக்குமண உள்ளிட்ட 64 தீர்த்தங்கள்பதிகம்: அலைவளர் தண்மதி – 3-10 திருஞானசம்பந்தர்
திரிதரு மாமணி – 3-101 திருஞானசம்பந்தர்
பாசமுங்கழிக்க -4 -61 திருநாவுக்கரசர்முகவரி: இராமேஸ்வரம் அஞ்சல்,
இராமநாதபுரம் மாவட்டம் 623526
தொபே. 04575 221223

இராமேச்சுரம் தொடர் வண்டி நிலையத்திற்கு 1.5 கி.மீ. தொலைவில் உளது. பாண்டி நாட்டுத் தலங்களுள் இது எட்டாவது ஆகும். கீழ்க்கடற்கரையில் அமைந்த இத்தலத்திற்கு தமிழ் நாட்டின் அனைத்துப் பெருநகர்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. பேருந்துக் கடற்பாலம் கட்டியபிறகு ஆலயம் வரை பேருந்துகள் செல்லும்.இராவணனைக் கொன்ற பெரும் பழி நீங்கும் பொருட்டு இராமபிரானால் எழுந்தருளுவித்து வழிபடப்பெற்ற கோயில் ஆதலால் இப்பெயர் பெற்றது. (இராம + ஈச்சுரம் = இராமேச்சுரம். ஈச்சுரம் = கோயில்.) இச்செய்தி “தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன், பூவியலும் முடிபொன்றுவித்த பழிபோயற, ஏவியலுஞ் சிலையண்ணல் செய்த இராமேச் சுரம்“ என்னும் இப்பதிக்குரிய ஞானசம்பந்தர் தேவார அடிகளால் இனிது விளங்குகின்றது. சேக்கிழாரும் “சேதுவின் கண் செங்கண்மால் பூசைசெய்த சிவ பெருமான்றனைப்பாடி“ எனக் கூறியுள்ளார்.
இறைவரின் திருப்பெயர் – இராமநாதர். இராமேச்சுரத்தில் எழுந்தருளச்செய்வதற்காகச் சிவலிங்கம் கொண்டுவரக் காசிக்குச் சென்ற அநுமார் திரும்பிவரக் காலந்தாழ்த்தமையால், சீதாபிராட்டியார் மணலால் குவித்துச் செய்த இலிங்கத்தை இராமபிரான் பூசித்தார். அவரே இராமநாதர் எனப் பெயர்பெறுவர். அநுமான் கொண்டுவந்த இலிங்கத்தை மூலலிங்கத்தின் வடபால் எழுந்தருள்வித்தார். அவரே விசுவலிங்கம் எனப் பெயர்பெறுவர்.இறைவியாரின் திருப்பெயர் – மலைவளர் காதலி. இத்திருப் பெயரை ஞானசம்பந்தப்பெருந்தகையார் “ஒரு பாகம் மலைவளர் காதலி பாட ஆடிமயக்கா“ என எடுத்து ஆண்டிருக்கின்றார். தீர்த்தம் – அக்நி தீர்த்தம், ராம தீர்த்தம், இலக்குமண தீர்த்தம், தனுக்கோடி முதலியன.இது சோதி லிங்கத் தலங்கள் பன்னிரண்டனுள் ஒன்றாகும். இப்பதிக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, அப்பர் பதிகம் ஒன்று, ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.இத்தலத்தைப்பற்றி “மறவாளிலங்கையிறைமகனை உதைத்த பழியால் மருண்டு, அரியன்று அறவாள் நேமியளித்தவனையருச்சித்தகன்ற அணிநகர்“ எனப் பரஞ்சோதியார், திருவிளையாடற் புராணம் அருச்சனைப்படலத்தில் கூறியுள்ளார்.

இலங்கைக்குச் செல்ல இராமபிரான் அணைகட்டிய இடம் சேது என்னும் பெயர்பெறும். அங்கே இராமபிரான் தன் வில்லின் முனையால் தோண்டிய தீர்த்தம் தனுக்கோடியாகும்.

இராமேச்சுரத்திலிருந்து தெற்கே 18 கி.மீ. தூரத்தில் தனுக்கோடி இருக்கின்றது. சேது ஸ்நானம் செய்பவர்கள் இங்குத்தான் செய்தல் வேண்டும். இத்தீர்த்தத்தில் நீராடச் செல்பவர்கள், தனுக்கோடி தொடர்வண்டி நிலையத்திலிருந்து செல்லுதல் நல்லது. அங்கிருந்து அதன் தூரம் 3 கி.மீ. தூரமாகும்.

இத்தலத்திற்கு நிரம்ப அழகிய தேசிகரால் பாடப்பெற்ற சேதுபுராணம் அச்சிடப்பெற்றுள்ளது.
“நீடுதநுக்கோடியினை நினைந்தாலும், புகழ்ந்தாலும், நேர் கண்டாலும் வீடுபெற லெளிதாகும்“
(சேதுபுராணம், தனுக்கோடிச் சருக்கம்) என்னும் அடிகள் இத்தனுக்கோடியின் பெருமையினை விளக்குவதாகும்.

This entry was posted in கல்வெட்டு, சேதுபதிகள், மறவர் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *