பாரி வேட்டை

பாரி வேட்டை என்றால் கொட்டு முழக்கத்துடன் செய்யும் இராக்காவலைக் குறிப்பதாக உள்ளது. பாரி வேட்டையிலும் கொட்டு முழக்கத்துடன் இரவில் வேட்டைக்குச் செல்லும் பழக்கமிருக்கிறது.வனவிலங்குகளின் தொல்லைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இரவில் காவலிருக்கும் பண்டைய பழக்கமே பாரி வேட்டையாக நிலவுகிறது. பாரி வேட்டை தற்போது தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் பிரான் மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. மாசி மாதத்தில் சிவராத்திரிக்கு மறுநாள் பாரி வேட்டைக்குச் செல்வது வழக்கம்.
இவ்வேட்டை வினை கருப்பணசாமி, அய்யனார்சாமி போன்ற வேட்டைக்காரச் சாமிகளின் வழிபாட்டுடன் தொடர்பு டையதாகவும் இருக்கிறது.
விழா நாளன்று வேட்டைக் கொம்பினால் ஒலி எழுப்பப்படும். அப்போது வேட்டைக்குச் செல்வோரெல்லாம் ஒருங்கே கூடிவிடுவர். கலந்து கொள்பவர்கள் பூசைப் பொருட்களையும் சமையல் பொருட்களையும் உடன் கொண்டு வருவர். வேட்டைக்காரசாமியினை வழிபட்ட பின் மலைப் பகுதிக்குச் செல்வர். உடன் கம்பு, ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களையும் எடுத்து வருவர். வேட்டைநாயும் உடன் வருவதுண்டு. முதல் வேட்டையில் முயல் சாய்ந்ததாகக் கொள்ளலாம். அதன் தலையினைத் திருப்பி ஒரு புல்லினை எடுத்து அதன் வாயில் வைப்பர். இப்புல்தான் முயலின் வாழ்வில் கடைசிப் புல் என்பதைச் சுட்டுவதற்காகவே இச்செய்கை மேற்கொள்ளப் படுகிறது.


முயலினை வேட்டையாடியவர் முயலின் காதளவுவைத்துக் தலையினை வெட்டிக் கொடுப்பார். இதற்கு ‘தரம்’ என்று பெயர். இவ்வாறே வேட்டையாடிய மற்றவற்றிலிருந்தும் தலையை மட்டும் வெட்டி எடுப்பர். முயலின் வயிற்றினைக் கிழித்து, ஈரலை மட்டும் வெளியே எடுத்துக் கம்பியில் கோர்த்துத் தீயில் வாட்டுவர். பின் அதனைப் பூசைப் பொருளாக வைத்து வேட்டைக்காரச் சாமியை வழிபடுவர். வேட்டை கிடைத்தமைக்கு நன்றி சொல்வர். இன்னும் அதிக வேட்டை கிடைக்க வேண்டும் என்று விரும்பி ஈரலைப் பிய்த்து நான்கு திசைகளிலும் நான்கு துண்டுகளை எறிந்து விடுவர்.
வேட்டையாடிய விலங்குகளின் தலைக்கறியினையெல்லாம் ஒன்று சேர்த்து, எடுத்துச் சென்ற சமையல் பொருட்களை வைத்து உணவு தயாரிப்பர். வேட்டையாடிய விலங்குகளின் உடல் கறியைக் கொண்டு வந்து கிராமத்து மக்களுக்கும் பகிர்ந்தளிப்பர். வேட்டையின் போது புலி, சிறுத்தை, கரடி போன்ற கொடிய விலங்கினைக் கொன்றிருந்தால், கிராமத்திற்கு வந்து வண்டியில் அவ்விலங்கினைத் துக்கி நிறுத்தி தாரை, தம்பட்டை முழங்க ஊரெல்லாம் சுற்றி வருவர். தங்கள் வீரத்தினைக் காட்டுவதற்காக இப்படிச் செய்கின்றனர். பழங்காலத்தில் அரசர்கள், குறுநில மன்னர்கள், ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் ஜமீன்தார்கள் பாரி வேட்டையினைத் தலைமையேற்று நடத்தினார்கள்.
சிலம்பம் :
சிலம்ப விளையாட்டு கம்பு விளையாட்டென்றும், நெற்றிப்பொட்டுக் கம்பு விளையாட்டென்றும், உயில் சிலம்பு என்றும் அழைக்கப் படுகிறது. தமிழ்நாட்டில் சிலம்பம் என அழைக்கப்படும் இவ்வீர விளையாட்டு, மராட்டிய நாட்டில் லாட்டி என்றும், குஜராத்தில் டால்லக்கடி என்றும், வங்காள நாட்டில் லாடிகீலா என்றும், கர்நாடகாவில் தண்டா வரிசை என்றும், ஆந்திராவில் கரடி ஆட்டம் என்றும், கேரளாவில் நெடுவடி என்றும் அழைக்கப் படுகிறது. சிலம்புதல் என்றால் ஒலித்தல் என்று பொருளாகும். கையிலுள்ள கம்பினை அடித்து     ஒலியெழுப்பி        விளையாடப்
பெறுவதால் இவ்விளையாட்டு சிலம்பு என்று பெயர் பெற்றது. சிலம்ப விளையாட்டு பயிற்சி நிறைந்த வீரவிளையாட்டு ஆகும். இதற்கான பயிற்சியைத் தருபவர் சிலம்ப வாத்தியார் என்றழைக்கப்படுகிறார்.

சிலம்ப வாத்தியார் நம்பிக்கையானவர்க்கு மட்டும் சிலம்ப விளையாட்டைக் கற்றுத் தருவார். இவ்வாறு ரகசியக்கலையாக சிலம்ப விளையாட்டு போற்றப்படுவதால், இவ்விளையாட்டு வளர்ச்சியடையவில்லை எனலாம். விளையாட்டில் ஈடுபடுவதற்கு நீளமான கம்பு வேண்டும். விளையாடுபவரின் உயரத்திற்களவாய்க் கம்பின் நீளம் இருக்கும். பெரும்பாலும் மூங்கில் கம்புகளையே பயன்படுத்துவர்.
கம்பு வீசுந்திறன், காலடி எடுத்து வைக்கும் முறை, வேகமாகச் செயல்படும் திறமை இம்மூன்றும் சிலம்ப விளையாட்டின் அடிப்படைக் கூறுகளாக உள்ளன. இக்கூறுகள் அனைத்தையும் கைவரப் பெற்றவர் ‘வீடுகட்டுதல்’ என்ற முறையில் தேர்ச்சி அடைந்தவராகிறார்.

பகைவர் கம்பு தன் உடல் மேல் படாத வண்ணம் தன் கம்புவீச்சுத் திறமையால் தடுத்தலை வீடுகட்டுதல் என்றும், கோட்டை கட்டுதல் என்றும் சொல்வர். விளையாட்டின் துவக்கத்தில் வணக்கம் செலுத்துதல் என்ற முறை உண்டு. முதலில் இறைவணக்கமும், அடுத்து குருவணக்கமும் இடம் பெறும். போட்டி விளையாட்டாக இருந்தால், எதிர்த்து விளையாடக் கூடியவர்க்கும் வணக்கம் செலுத்துவர். இது தமிழர் விளையாட்டின் சிறப்பு முறையாக வழங்கி வருகிறது.
எதிரியின் கம்பு தன் உடல் மேல் படாமல் தடுத்தல், தன்னுடைய கம்பினால் எதிரியின் உடலைத்தொடுதல் ஆகிய செயல்களைக் கொண்டு வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. கம்பின் நுனியில் வண்ணப் பொடியினைத் தடவியிருப்பர். சிலம்பம் போட்டியில் விளையாடுபவர்களின் உடலில் எத்தனைத் தடவைகள் கம்பின் நுனி பட்டிருக்கிறது என்பதனை வண்ணப் பொடியின் துணைக் கொண்டு கணக்கிட்டும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பர். தமிழகத்தில் சிலம்ப விளையாட்டு தற்காப்பு கலையாகவும், வீரவிளையாட்டாகவும், விழாக் காலங்களில் கேளிக்கையாட்டமாகவும், பாடல்பாடியும் விளையாடப் பெறுகிறது.
புலிவேடம் :
இது வீரவிளையாட்டான சிலம்பத்தின் இன்னொரு வடிவமாகும். விளையாடுபவர்கள் உண்மை யிலேயே புலி வேடந்தரித்து ஆடுவதால் இவ்விளையாட்டுக்குப் புலிவேடம் என்று பெயர் வந்தது.சிலம்ப விளையாட்டில் தனக்கு நிகர் எவருமில்லை என்றகுறிப்பினை வெளிப்படுத்துவது இவ்வீர விளையாட்டின் நோக்கமாக அமைகிறது.
புலிவேடமிடுபவர் கையில் புலிநகம் மாட்டியிருப்பர். உடல் முழுவதும் புலியினைப் போல வரிக்கோடுகள் போடப்பட்டிருக்கும்.

இரும்பு வளையத்துடன் கூடிய நீண்ட வாலினை இடுப்பில் கட்டியிருப்பர். இவ்வாலைப் பிடிப்பதற்கென ஒருவர் பின்னால் நிற்பார். வேடமிடுபவர் ஆடும் ஆட்டத்திற்கேற்ப முன்னும் பின்னும் அவர் நடந்து கொடுக்க வேண்டும். எனவே, வால்பிடிப்ப வரும் சிலம்பப் பயிற்சியில் தேர்ச்சி அடைந்தவராக இருப்பர். இன்னொருவரும் புலிவேடமிட்டிருப்பார். ஆனால் இவருக்கு வால் பிடிப்பதற்கென யாரும் இருப்பதில்லை. எனவே, இவர் ஒண்டிப்புலி என்று அழைக்கப்படுகிறார்.
இரண்டு புலிகளுக்குமிடையே மோதல் வந்து விடக்கூடாது என்பதற்காக மூங்கில் கம்பினைக் குறுக்கே வைத்துப் பிடித்தபடி இருவர் நிற்பர்.
சிலம்புப் பயிற்சி அளித்த ஆசிரியர் வீட்டிலிருந்து ஆட்டம் துவங்கும். நகர் மொட்டு என்றவாத்தியத்தின் ஒலிக்கேற்ப புலியாக இருப்பவரும், ஒண்டிப் புலியாக இருப்பவரும் பாவனை விளையாட்டுகளில் ஈடுபடுவர். பாவனை விளையாட்டுகள் சிலம்பப் பயிற்சியுடன் தொடர்புடைய தாக இருக்கும். சில சமயங்களில் கெளரவப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருபுலிகளாக இருப்பவர் களுக்கும் மோதல் வந்துவிடவும் கூடும். அச்சமயம் ஒண்டிப் புலிக்காரர் பக்கத்தில் ஓர்ஆடு நிறுத்தப்பட்டிருக்கும்.

புலி வேடமிட்டவர் நடுவிலுள்ள கம்பினைத் தாண்டி வந்து, அவ்வாட்டினைப் பல்லினால் கடித்துத் தன்பக்கம் துக்கியெறிய வேண்டும். ஆட்டினைத்துக்க விடாமல் ஒண்டிப்புலிக்காரர் கம்பு வீச்சினால் தடை செய்வார். புலியாக இருப்பவர் தன் கம்பு வீச்சுத் திறமையால் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து செயல்பட வேண்டும்.
சிலம்ப விளையாட்டில் தன்னை யாராலும் எதிர்க்க முடியாது அல்லது எதிர்த்தாலும் வெல்ல முடியாது என்று நினைப்பவர் புலிவேடத்தின் போது இரட்டை வாலினைக் கட்டுவதுண்டு. அச்சமயம் உள்ளூர் காரரோ, விழாவினைப் பார்க்க வந்தவரோ போட்டிக்கு இழுத்தால் போட்டி விளையாட்டு துவங்கி விடும். விழாக் காலத்தில் நடைபெறும் இவ்வாட்டம் சிலம்ப வாத்தியாரின் வீட்டிலிருந்து துவங்கி கோயிலுடன் முடிவு பெற்று விடும். போட்டியாட்டத்தில் ஈடுபட்ட வராயிருந்தால் மனவேற்றுமை நீங்கி ஒன்றாகத் தெய்வத்தினை வணங்குவர்.

This entry was posted in பாரிவேந்தன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *