நீதி காத்த பாண்டிய மன்னர்கள்


இந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வளர்க்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக விளங்கினர். சங்கம் அமைத்துப் புலவர்களுடன் தாங்களும் உடனிருந்து ஆராய்ந்து இவர்கள் தமிழ் வளர்த்தனர் என்பதைத் தமிழ் உலகம் நன்கறியும்.


இம்மன்னர்கள் கல்வியில் சிறந்த மேதைகளாகவும், தங்கள் ஆட்சியில் நீதி பிழைத்தால் தங்கள் உயிரை ஈந்து செங்கோலை நிமர்த்தும் நீதி மன்னர்களாகவும், வீரத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பராக்கிரமசாலிகளாகவும் விளங்கினர் என்பது வரலாறு. நெடுஞ்செழியன் மன்னன் கல்வி கற்றலை மனித வாழ்க்கையில் பெரும் பயனாகக் கருதுபவனாகத் திகழ்ந்தான். இவன் பாடிய பின்வரும் பாடல் இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
உற்றுழியுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போரன்ன உடன் வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலாற்றாயுமனந் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக வென்னாதவருள்
அறிவுடையோனாரரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாள் பாலுள்ளும்
கீழ்ப்பாலொருவன் கற்பின்
மேற்ப்பாலொருவனும் அவன் கட்படுமே.
(புறநாநூறு)
ஆசிரியருக்கு ஒரு ஊறு நேர்ந்தால் உடனே விரைந்து உதவியும், பொருளுமீந்து கற்றலே மிகவும் இன்றியமையாதது. ஒரு தாய்வயிற்றில் பிறந்தோரில் மூத்தோன் வருக என அழைத்தாலும் அவர்களுள் கற்ற அறிவுடையோனின் வருகையையே சபையும், அரசும் விரும்பும்.நாற்குலத்தோரும் கற்றவனை வணங்குவார்கள். இப்படி அரசர் கற்றலின் சிறப்பைச் சிலாகித்துக் கூறுகிறார்.
கண்ணகி வழக்கில் தன் தவறுணர்ந்தும் கோவலன் கள்வனல்லன், யானே கள்வன் என்றரற்றி அரசு கட்டிலில் அமர்ந்தபடியே உயிர் துறந்து வளைந்த செங்கோலை நிமிர்த்தி நீதி காத்தான் அந்த அரசன். படைகொண்டு வடநாடு சென்று ஆரிய அரசர்களை அடக்கி வெற்றி வாகைசூடியதால் இளங்கோவடிகளது அருமைத் திருவாக்கால் இந்த அரசன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று பாராட்டப்பட்ட மன்னர்.
பாண்டிய வேந்தர்களில் பெரும்பாலானோர் நிறை கல்விமான்களா கவும், சிவபக்தர்களாகவும் விளங்கினர். தலையாலகானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், வீரத்துக்குப் புகழ் சேர்த்தவன். சித்திர மாடத்தில் துஞ்சிய நன் மாறனின் புதல்வனான இவன் இளைஞனாக இருந்தபோது தந்தை இறந்ததால் இளமையிலேயே அரசு கட்டில் ஏறினான்.
இராஜசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளி, சேரன் யானைகட்சேய் மந்தாரஞ் சேரலிரும் பொறை, திதியன், எழினி, எருமையூரான், இருங்கோவேண்மான், பொருனன் ஆகிய ஏழு மன்னர்களும் படைகளுடன் வந்து பாண்டி நாட்டைச் சூழ்ந்து கொண்டனர். நெடுஞ்செழியன்மீது போர் தொடுத்தனர்.
அது கண்டு வெகுண்ட பாண்டிய இளவல் சமர்க்களம் சென்று கடும் போர் தொடுத்தான். இந்த இளம் வீரனின் ஆற்றலுக்காற்றாது அந்த ஏழு மன்னர்களும் படைகளும் புறமுதுகிட்டு ஓடியும், விடாது போர்ப்பறை முழங்க துரத்திச் சென்று தலையாலங்கானத்தில் மறித்துப் பெரும் வெற்றி வாகை சூடினான்.

இவன் இவ்வளவோடு நில்லாமல் பகைவர்களின் உறையூர், வஞ்சி ஆகிய தலை நகரங்கள்வரை துரத்திச் சென்று நாடுகளைத் தன்னடிமைப்படுத்தினான். அதன் காரணமாகவே இம்மன்னனுக்குத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற அடைமொழியுடன் கூடிய பெயர் வழங்கப்பட்டது என்று புறநாநூறு கூறுகின்றது.

கி.பி. 125ஆம் ஆண்டில் பாண்டிய இராச்சியத்தின் அரியாசனம் ஏறிய சுந்தர பாண்டியன் தென்னிந்தியாவிலுள்ள சேர, சோழ, பல்லவ, தெலுங்கு, கர்நாடக, போசன போன்ற எல்லா அரசர்களையும் வென்று தன்னடிமைப்படுத்தி ஒவ்வொரு அரசின் தலைநகரிலும் வீராபிஷேகம் செய்தான். எம்மண்டலமும் கொண்ட சுந்தரபாண்டியன் என்ற புகழ்பெற்று செங்கோலோச்சினான் எனக் கல்வெட்டுகள், வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இவ்வேந்தன் தில்லையம்பலம், திருவரங்கம் போன்ற பேராலயங்களுக்குப் பொன் வேய்ந்து பொன்வேய்ந்த பெருமான் என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றான். இம்மன்னனின் புகழ்நிலை பற்றி அக்காலப் புலவர் ஒருவர் இவ்வாறு பாடியுள்ளார்.
வாழ்க கோயில் பொன் வேய்ந்த மகபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தரபாண்டியன் தென்னவனே
இலங்கை அமைச்சர் ஒருவரின் வேண்டுகோளுக்கமைய தன் தம்பி சடையவர்மன் வீரபாண்டியனைப் பெரும் படையுடன் இங்கு அனுப்பி வைத்தான். வீரபாண்டியன் இலங்கையில் பல வெற்றிப் போர்களை நிகழ்த்தி இலங்கையரசருள் ஒருவனைக் கொன்றும் மற்றொருவனுக்கு முடிசூட்டி திருகோணமலை, திரிகூடகிரி என்பவற்றில் கயல் இலச்சினையைப் பொறித்து மீண்டான் என வரலாறு கூறுகின்றது.
இவ்வீரபாண்டியன் தன் சகோதரனாகிய சுந்தரபாண்டியனைப் போல் கொங்கு நாடு, ஈழநாடு, விஜயகண்ட கோவலன் நாடு ஆகியவற்றையும் வென்றவன். பல்லவ அரசனிடம் திறைபெற்றுத் தில்லைமா நகரில் சிவகாம கோட்டத்துக்கு தென்புறமுள்ள நூறுகால் மண்டபத்தில் கி.பி. 1267ஆம் ஆண்டில் வீராபிஷேகமும், விஜயாபிஷேகமும் செய்து கொண்டான்.
இதனால் அம்மண்டபம் வீரபாண்டியன் திருமண்டபம் என்னும் பெயர் எய்தலாயிற்று என்றும் அம்மண்டபத்தின் முன்வாயிலில் அப்பெயர் பொறிக்கப்பட்டிருத்தலை இன்றும் காணலாம் என்றும் சொல்லப்படுகின்றது. பேராசிரியர் சதாசிவப்பண்டாரத்தார் இது பற்றி தெளிவுபடக் கூறியிருக்கிறார்.
பாண்டிய மன்னர்கள் சிவ பக்தர்களாகவும், கற்றுத் தேர்ந்த புலவர்களாகவும், மாவீரர்களாகவும் விளங்கினர் என்பதை வரலாற்றில் காணமுடிகிறது. தென்நாடு முழுவதும் வென்று இலங்கை வரை சென்று தங்கள் புகழ் பரப்பியவர்கள் சடைய வர்மன் சுந்தர பாண்டியனும், இவன் தம்பி வீரபாண்டியனுமாவார்.
அலாவுடீன் கில்ஜியின் படைத் தலைவன் மாலிக்கபூரின் படையெடுப்பால் மதுரை மாநகரும், பாண்டிய இராச்சியத்தின் பல பகுதிகளும் முகமதிய வீரர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. ஆலயங்கள் தகர்க்கப்பட்டன. மக்கள் என்றும் அறியாத துன்பத்தில் ஆழ்ந்தனர்.
மாலிக்கபூர் பொன்னையும், பொருளையும் கொள்ளையடித்துச் சென்றான் என பார்னி எனும் ஆசிரியர் கூறியுள்ளார். மாலிக்கபூரின் கொள்ளையடிப்பைத் தொடர்ந்து பாண்டிநாடு  பகைஅரசுகளின் வேட்டைக்காடாகியது.
பாண்டிய இராஜ்யத்தில் இடம்பெறும் அநீதிகளையும், இந்துமத ஒடுக்கத்தையும் கேள்வியுற்ற விஜயநகர மன்னர் குமார கம்பண்ணர் பெருமையுடன் தமிழ் நாட்டிற்கு வந்தார். விஜயநகரப் பேரரசர் குமார கம்பண்ணரின் பட்டத்துத் தேவி கங்காதேவி கணவரின் வெற்றி குறித்து எழுதிய மதுரா விஜயம் என்னும் வடமொழி நூலின் தமிழாக்கம் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
ஒருநாள் இரவு தன் கணவரின் கனவில் ஒரு தெய்வப்பெண் தோன்றிப் பாண்டிநாட்டில் பகைவர்ஆட்சியினால் மக்கள் அடையும் துன்பத்தையும், திருக்கோயில்கள் இடிபடுவதையும், வைதிக சமயம் இழிவு படுத்தப்படுவதையும் எடுத்துக் கூறினாள். தன் கையில் உள்ள வாளை மன்னர் கையில் கொடுத்தாள்.
இவ்வாள் சிவபெருமானால் பாண்டியர்களுக்கு கொடுக்கப்பட்டது. இவ்வாள் படையை எடுத்துப் போர் புரியும் வன்மை பாண்டியர்களுக்கு இல்லாது போகவே அகத்தியரிடம் வந்தது. அகத்தியர் இந்த ஆயுதத்ததை என்னிடம் தந்து உன்னிடம் கொடுக்கும்படி கூறினார். ஆகவே இந்த வாளினால் பகையை வென்று பாண்டி நாட்டையும் மக்களையும் காப்பாயாக என்று கூறி மறைந்தாள். இப்படி மதுரா விஜயம் கூறுகின்றது.இதன் பின் கல்வியிலும், நீதியிலும், வீரத்திலும் புகழ் பெற்று விளங்கிய பாண்டியப் பேரரசு அருகிமறைந்தது என்று அறியமுடிகிறது.
….
This entry was posted in பாண்டியன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *