சேற்றில் முளைத்தவனா வெள்ளையத்தேவன்?

உள்ளே புகுமுன், முதலில் புரட்டையும், புனைவுக் கதையையும் பார்ப்போம்.
“அடர்ந்த மரங்கள், அணியணியாகச் செழித்திருந்தது ஒரு காடு. அங்கு சேரும் சகதியும் நிறைந்த ஒரு பள்ளத்தில் ஒரு சிறு குழந்தை சிக்கி இருந்தது. அன்றைய தினம் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபா

ண்டிய கட்டபொம்மு நாயக்கர் அந்தப் பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். குரைத்துக் கொண்டு ஓடிய வேட்டை நாயைப் பின் தொடர்ந்து சென்றான். சேற்றில் குழந்தையைக் கண்டான். அந்தக் குழந்தையை கண்டு வாரி அழைத்துக் கொண்டான். திரும்பினான் அரண்மனை.

“காட்டில் கண்டிபிடிக்கப்பட்ட குழந்தை ஒன்று அரண்மனையில் வளர்ந்து வருகிறது என்பது தெரிந்து குழந்தையின் பெற்றோர்கள் மன்னருடன் விவரம் சொல்லி குழந்தையை தரும்படியாக வேண்டினர். மறுத்துவிட்டான் மன்னன். பிள்ளை பாசம் பெற்றவர்களுக்கு அல்ல, வளர்த்தவனுக்கு. பயனில்லாததால் திரும்பிவிட்டனர் பெற்றோர்கள்”
குழந்தை யார்?
ஒரு நாள் மங்களத்தேவர் அவர்களின் மனைவி விறகு வெட்டுவதற்காக காட்டிற்குப் புறப்பட்டார். போகும் போது தமது கைக்குழந்தையையும் எடுத்துச் சென்றார்.  ஒரு மரத்தடியில் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு காட்டிற்குள் சென்றுவிட்டாள். போனவள் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இருட்டிவிட்டது. தூங்கி எழுந்த குழந்தை தாயைக் காணாது தவழ்ந்து சென்று அந்தச் சேற்றில் சிக்கிக் கொண்டது.

வீட்டுக்கு வந்த தமது மனைவியை பார்த்து குழந்தை எங்கே? என்று கேட்டாராம் மங்களத்தேவர். பதறிப்போய் தாய் தேடிப் புறப்பட்டாள். மற்றும் சிலரும் தொடர்ந்து காடு சென்றனர். கிடைக்கவில்லை. அந்தக் குழந்தை தான் அரண்மனையில் வளர்ந்து வருகிற வெள்ளையத்தேவனாகும் .
இது தான் அந்தக் கட்டுக்கதை. பொய்ப் புரட்டு.
மறக்குலத் தாய்மார்களுக்கு களங்கத்தை உண்டாக்கியுள்ளனர்.  தாய்மார்கள் தன்னுயிரைக்கூட இழக்கத் துணிவர். ஆனால்…..! தமது குழந்தையை வினாடியும் விட்டுப் பிரியாதவர்கள். விறகு வெட்டப் போனவள் குழந்தையை மறந்து விட்டு வந்துவிட்டாள் என்பது தாய்க்குலத் துரோகச்செயலாகும். அடுத்து காட்டுக்கு வேட்டையாட வந்த கட்டபொம்மன் குழந்தையைக் கண்டு எடுத்து வந்து வளர்த்தான்.
படைத்தலைவனாக்கினான். அவன் தான் வெள்ளையத்தேவன். உண்ட கடனுக்காக உயிர் கொடுத்தான். செஞ்சோற்றுக் கடன் தீர்த்தான் என்று மறக்குல மாண்புக்கு மீது அழியாப் பழி சுமத்தியுள்ளனர்.
என்றாலும்…… தவறு யாருடையது?
மறக்குல மக்களே அடிச்சுவடுகூடத் தெரியாது, புரியாது அவல நிலையில் இருக்கின்றனரே.  வரலாறு எழுதுபவர்களாவது உண்மை நிகழ்ச்சிகளை ஒதுக்கித் தள்ளிவிடாது முறையானவற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது தான் வரலாறு ஆகும். தவறினால் திறனாய்வு இல்லாத புரட்டர்கள் என்ற களங்கம் ஏற்பட்டுவிடும்.

கட்டபொம்மு நாயக்கர் பிறந்தது 03-01-1760
பட்டம் ஏற்றுக் கொண்டது 02-02-1790
அவன் தூக்குக்கயிற்றில் தொங்கியது 16-10-1799
மொத்தம் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி தான்.

02-02-1790ல் பட்டம் ஏற்றவன் வேட்டையாட காட்டிற்குப் போகிறான். கண்டெடுத்தான் ஒரு குழந்தையை. பொடி நடை பயிலும் வயது. சண்டை துவங்கியது. 1798 ல் இந்த ஒன்பது ஆண்டு காலத்திற்குள்ளாக வளர்ந்து வில், வாள் பயின்று வீரனாக படை நடத்தும் தலைவனாக ஆகிவிட்டான் என்றால்…..! மந்திர வித்தையா?

அவனுக்கு வெள்ளையம்மாளைத்   திருமணம் செய்திருக்க முடியுமோ? கற்பனைக்குக் கூட எட்டாத ஒன்றை கதையாக தீட்டிவிட்டனர். கதையும் அல்ல. களங்கத்தை உண்டாக்க வேண்டும் என்று தீட்டிய புரட்டு, புனைந்துரையாகும்.
வெள்ளையத்தேவன்?
முத்தமிழ் நாடாம் வித்தகர் போற்றிப் புரக்கும் செந்தமிழ்நாடு சேதுபதி சீமை. அதன் அணிகலனாக உள்ள சிறு கிராமம் சாயல்குடி. அதன் அருகே மங்கம்மாள் சாலை இருந்ததால் சாலைகுடி என்று பெயர் இருந்தது. வசதிகள் நிறைந்த இடமாக இருந்தது. மேலும் பல தியாக வீரர்களை விளைவித்த நிலம், பின்னால் அது சாயல்குடி என்ற பெயராகி விட்டது.
அந்த சாயல்குடியில் வாழ்ந்து வந்த பெரியார் மங்களத்தேவர் அவர்கள். மக்கட் பண்புடன் வாழ்ந்த அவர் குறுநில மன்னரின் சிறப்புக்குரியவராகவும் இருந்தார். அவரது திருமகன் தான் வெள்ளையத் தேவன். சேற்றில் கண்டெடுத்தவன் அல்ல. சேது நாட்டின் செந்தமிழ் செல்வனே ஆகும்.
இளமையில் அவன் மறக்குல மாண்புடன் வில், வாள். ஈட்டி முதலிய வீர விளையாட்டுகளில் வல்லவனாக விளங்கினான். அவனது துணையாக இருந்தவர்கள் கட்டகருப்பணன், சுந்தரலிங்கம் என்ற இரு தாழ்த்தப்பட்ட (அரிசன)  இன வீரர்கள். இணைபிரியாத தோழர்களாவர்.
இந்த நிலையில்,ஒருநாள் கட்ரா, கட்டப்பிரமையா என்ற கம்பளத்து நாயக்கர் வாரிசு, வீரபண்டியாபுரம் கட்டபொம்மு நாயக்கர் சாயல்குடி வந்தான். மங்களத்தேவர் அவர்களைக் கண்டான். எட்டயபுரம் அரசர் தமக்குச் செய்துவரும். தொல்லைகளையும், அதனால் தாம் அடைந்த இன்னல்களையும் எடுத்துக் கூறினான். ஆதரவு தந்துதவ வேண்டினார் தேவர் அவர்களிடம்.
“வெள்ளையத்தேவா….  !
வந்திருப்பவர் வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கர் நம்மிடம் உதவி வேண்டி வந்திருக்கிறார். வந்திருப்பவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. எனவே, நீ உடன் சென்று அவருக்கு உறுதுணையாக இருந்து வெற்றி கொண்டு வா. உனக்குத் துணையாக உனது நண்பர்கள் கட்டக்கருப்பணன், சுந்தரலிங்கம் இருவரையும் வேண்டிய ஆட்களையும் கூட்டிச் செல்க” என்றார்.
தந்தை ஆணைப்படி தனையன் வெள்ளையத் தேவன் புறப்பட்டான். வீரபண்டியாபுரம் கட்டபொம்மு நாயக்கரும் வந்து சேர்ந்தான்.
வெள்ளையத்தேவன் கட்டபொம்முவுக்கு உதவிக்கு வந்ததை அறிந்த எட்டயபுரம் அரசர் திசை திருப்பப்பட்டது. தென் நாட்டில் வந்த வெள்ளையர்களுக்கு ஆதரவு கொடுத்தார். எப்படியும் தனக்கு துரோகம் செய்த கட்டபொம்முவை ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தாரே தவிர, எட்டயபுரம் அரசர் குமார முத்து எட்டப்பர் துரோகியல்ல. துரோகிகளை ஒழிக்க முன் வந்தவர்.
தமிழ்க் கலை வளர்த்தவர். பல தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர். உமறுப் புலவர் போன்றோர்களை வளர்த்தவர். உறுதுணையானவர் தான் எட்டயபுரம் அரசர். எட்டயபுரம் மகாக்கவி பாரதியார் பிறந்த இடமல்லவா? தமிழ் வளர்த்த வள்ளல் எட்டப்பர் துரோகியாக்கப்பட்டார்.  தமிழனைக் காட்டிக் கொடுத்தும், கொள்ளை அடித்தும், கிட்டி போட்டு வசூல் செய்தவன் வீரானாகிவிட்டான் (கட்டபொம்மன்). அவனை வீரானாக்கிய பெருமை தமிழ் மண்ணுக்குத்  (ம.போ.சிக்கு) தான் உண்டு.
ஆதியில் எட்டயபுரம் அரசருக்கு உரிமையாக இருந்தது செக்காரக்குடி கிராமம். அங்குள்ள வேளாளர்கள் செழிப்பாக இருந்து வந்தனர். அவர்களை அடக்க எண்ணினார் எட்டயபுரத்தார். அப்பொழுது (எட்டயபுரத்தார்க்கு) தமது அடைப்பக்காரனாக இருந்தவன் தான் கட்ரா கட்டப்பிரமையா. அவனது வாரிசுதாரர் கருத்தையா என்ற கட்டபொம்முவை செக்காரக்குடி அனுப்பினார்.  வேளாளர்களை அடக்கியவன், தானே அங்கு பொறுப்பேற்றுக் கொண்டு எட்டயபுரத்தார்க்கு எதிரியாகிவிட்டான்.
அடுத்திருந்தது  வீரபாண்டியபுரம். அங்கு சென்றான். வீரபாண்டிய மன்னனிடம் அடைக்க்கலாம ஆனான். பணியிலும் அமர்ந்து கொண்டான். அவன் வாரிசு இன்றி காலமானதால், அவனுக்கு செய்ய வேண்டிய இறுதிக்கடன்களை நிறைவேற்றியவன். தானே வீரபாண்டியபுரம் அரசர் என்று பட்டமும் சூடிக்கொண்டான். எனவே வீரபாண்டியபுரம் அரசராக கட்டபொம்மன் ஆகிவிட்டானே தவிர பாண்டியன் அல்ல, பாண்டியன் மரபினனும் அல்ல.
எனவே, தஞ்சமென்று தந்தையிடம் அடைக்கலம் புகுந்த, வீரபண்டியபுரம் கட்டபொம்மனுக்கு அஞ்சேல் என ஆதரவு கொடுத்து தமது உயிரையும் தியாகம் செய்த மறத்தமிழ் மாவீரன் வெள்ளையத்தேவனே தவிர, செஞ்சோற்றுக்காக பிள்ளை புகுந்தவன் அல்ல. தாய்க்குலத்திற்கு துரோகம் செய்பவர் மறவர் மக்கள் அல்ல என்பதை நாடே அறியும்.
……
This entry was posted in வெள்ளையத்தேவன் and tagged . Bookmark the permalink.

7 Responses to சேற்றில் முளைத்தவனா வெள்ளையத்தேவன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *