குடுமியான்மலை -1

Kudumiamalai_gopuram

குடுமியான்மலை, புதுக்கோட்டையிலிருந்து ( தமிழ் நாடு, இந்தியா) 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இங்குள்ள குகைகளில், பல்லவர் கால (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பண்ணையும் (அண்ணா பண்ணை, குடுமியான் மலையில் இருந்து ஐந்து கிலோமீட்டர்கள்) இங்கு அமைந்துள்ளது.

வரலாறு :

தற்பொழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில், குடுமியான்மலையும் ஒன்று. முற்காலக் குறிப்புகளில் திருநாலக்குன்றம் என்றும், பின்னர் சிகாநல்லூர் என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில்தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில்வளாகம் அமைந்துள்ளது.

சங்கநூல் குறிப்பு ;

‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சியின்கீழ் இந்த ஊர் இருந்தது. இந்த ஊரில் இருந்துகொண்டு இவன் யாகம் செய்ததால் இவனைக் ‘குடுமிக் கோமான்’ என்று போற்றி மகிழ்ந்தனர். இவன் சிறந்த கொடையாளி.

 குடைவரைக் கோயில் :

குன்றின் மேலும், அதன் அருகிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடைவரைக் கோயிலும், கலை நயம் மிக்க சிலைகளை உடைய சிகாநாதசுவாமி கோயில் என்ற பெரிய சிவன்கோயிலும் அடங்கும். குடைவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள், இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன.

கல்வெட்டுகள் :

இந்தக் கல்வெட்டுகள், குடுமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதிசெய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும், பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (ஏழு-எட்டாம் நூற்றாண்டு), குடுமியான்மலைக் கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டுச்செல்கின்றன. மேலக்கோயிலில் உள்ள, பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்தச் சிவாலயம் சைவ சமய மீட்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

 சிவன் வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் :

இங்குள்ள சிற்பங்கள் ஒன்றில், சிவன் வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் (வீணா-தாரா).(சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது). இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக்குறிப்புகள் குடுமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திருக்கக் கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.

 மறு சீரமைப்புப் பணிகள் :

சோழப் பேரரசின் தொடக்க காலம் முதல்தான், இக்கோயிலின் வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தொடக்க காலச் சோழர் கல்வெட்டுகள் (கி.பி ஒன்பதாம்-பத்தாம் நூற்றாண்டு) மேலக்கோயிலிலோ, இரண்டாம் பிரகாரத்தின் சுவர்களிலோ காணப்படுகின்றனவே தவிர முதன்மைக் கோயிலில் (Main shrine) காண இயலவில்லை. இதனால், இக்கோயில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் (remodelled) என்று அறியப்படுகிறது. கட்டடக்கலை பாணியை கருத்தில் கொண்டு பார்க்கையில், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில்தான் இந்த மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

கி.பி 1215 முதல் 1265 வரை, ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம், மறு சீரமைப்புப் பணிகள் நடை பெற்றன. பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் புதிய கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன. இந்தப்பணியில் கோனாட்டைச் சேர்ந்த நாடுகளும் (வட்டார ஊர்கள் ஒன்றிணைந்த அமைப்பு) நகரங்களும் (வணிகர்களின் அமைப்பு) ஊர்களும், படைப்பற்றுகளும் (Cantonments) பங்கு கொண்டன. ஈகை உள்ளம் கொண்ட தனி நபர்களும் உதவினர். 24 adam-s (one league) கொண்ட ஒவ்வொருவருக்கும் வரிப்பணம் விதிக்கப்பட்டுக் கோயில் பணிக்காகத் திரட்டித் தரப்பட்டது. பணம் தவிர்த்த இன்ன பிற பங்களிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

 சென்றடையும் வழி :

புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து ஏறக்குறைய 20 கி.மீ தொலைவில் குடுமியான்மலை அமைந்துள்ளது. முக்கிய சாலையில் இருந்து விலகி மலை அடிவாரம் நோக்கிச் சென்றால் கோயில் வளாகத்தை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து நகரப்பேருந்து வசதி உண்டு. பேருந்து எண் : எண் 5 , 28 . என்ற எண் கொண்ட பேருந்துகள் சுமார் 45 முதல் ஒரு மணிநேரம் வரை ஆகும், வழியாக கடந்துசெல்லும் ஊர்கள், திருவப்பூர் , பெருமாநாடு , குமரமலை விளக்கு, புல்வயல் , அன்னாப்பண்ணை, வயலோகம், விசலூர் , குடுமியான்மலை.

நன்றி : விக்கிபிடியா

 

This entry was posted in கல்வெட்டு and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *