எதையும் சுமப்பேன் அவருக்காக!

மதுரையை வணங்காமுடி பாண்டிய மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். மனைவி விஷயத்தில் அவன் கொடுத்து வைத்தவன். கணவனின் குறிப்பறிந்து மட்டுமல்ல, குறிப்பு அறியாமலும் சேவை செய்யும் குணமுள்ளவள். இப்படி ஒரு பத்தினி அமைந்தால் மன்னனுக்கென்ன கவலை. அவன் இன்ப வாழ்வு நடத்திக் கொண்டிருந்தான்.


ஒருநாள், பாண்டியநாட்டுக்கு பொய்யாமொழி புலவர் என்னும் தமிழ் வித்தகர் வந்தார். மீனாட்சியம்மன் கோயிலில் மன்னன் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கு சென்றார். அங்கே சொக்கநாதப் பெருமான் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்தான் மன்னன்.
இதைப்பார்த்த புலவர்,””மன்னா! நீ சந்திரகுலத்தைச் சேர்ந்தவன். அந்த சந்திரன் சிவபெருமானின் தலையில் போய் உட்கார்ந்திருப்பவன். அப்படிப்பட்ட சிறப்புமிக்க குலத்தைச் சேர்ந்த நீ, இந்த சொக்கநாதனின் கால்களில் போய் விழலாமோ?” என்ற பொருள்பட ஒரு பாடலைப் பாடினார்.
மன்னன் தன் குலப்பெருமையை வெளிப்படுத்திய அந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்தான். புலவரை வரவேற்று,””அவரது விருப்பம் என்ன?” என்று கேட்டான்.
“”மன்னா! மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்க வேண்டும், அதற்குரிய பணிக்காகவே இங்கு வந்துள்ளேன். உன் ஆதரவு வேண்டும்,” என்றார் புலவர்.
“”அப்படியே ஆகட்டும்,” என்ற மன்னன், அவரை அழைத்துக்கொண்டு சங்கப்புலவர் சந்நிதிக்குச் சென்றான். அங்கே புலவர் பாடிய ஒரு பாட்டை சந்நிதியில் இருந்த 49 புலவர்களின் சிலைகளும் தலையசைத்து, கைதட்டி பாட்டைக் கேட்டன. மன்னன் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. உயிரோட்டமான பாடல் தந்த புலவருக்கு மதிப்பளிக்கும் வகையில், அவருக்கு தனி மாளிகை, சேவகர்கள் தந்து மன்னன் உபசரித்தான்.
ஆனால், அரசியல்பணி காரணமாக புலவரின் விருப்பமான தமிழ்ச்சங்க பணியை தாமதித்து விட்டான். கோபமடைந்த புலவர் பல்லக்கில் ஊரை விட்டே கிளம்பிவிட்டார். சேவகர்கள் ஓடிவந்தனர். மன்னன் உறங்கிக் கொண்டிருந்தான். மகாராணியிடம் முறையிட்டனர்.
அவள் பதறிவிட்டாள். புலவர் ஏதாவது பாடி சாபமிட்டால், மன்னனுக்கு ஏதும் செய்து விடக்கூடாதே என பயந்தாள். ஆண்போல வேடமணிந்து பல்லக்கை நோக்கி ஓடினாள். பல்லக்கு சுமந்த ஒருவனை விலகச்சொல்லி விட்டு, அவளே சுமந்தாள். பெண்ணல்லவா! அதிலும் பூஞ்சிட்டு கைகளைக் கொண்ட மகாராணியல்லவா! பலமற்ற அவள் பல்லக்கை சுமக்க சிரமப்பட்டாள்.
பல்லக்கு ஆடியது.
“”பல்லக்கு ஏன் ஆடுகிறது?” என புலவர் கூச்சலிட்டார். “”யாரோ ஒரு புதியவன் வந்து தூக்குகிறான். அதனால் தான்…” என்றனர் சேவகர்கள்.
புலவர் கீழே இறங்கி வந்து பார்த்தார். அவருக்கு புரிந்து விட்டது. அங்கே நிற்பது ஒரு பெண், அதிலும் ராணி என்று.
அவர் அதிர்ந்து போனார்.
“”ஏன் இப்படி செய்தாய் ராணி?” என்றார்.
“”என் கணவரைக் காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை. தாங்கள் கோபத்தால் வெளியூர் செல்ல வேண்டாம். மேலும், நீங்கள் ஏதேனும் சாபமிட்டு பாடினால், என் கணவருக்கு ஆகாது. தயவுசெய்து மீண்டும் அரண்மனைக்கு திரும்ப வேண்டும். சங்கப்பணிகள் குறித்து மன்னரிடம் நானே பேசி ஏற்பாடு செய்கிறேன்,” என்றாள்.
புலவர் மனம் குளிர்ந்து, “”அம்மா! நீ உமாதேவியை விட குணத்தில் உயர்ந்தவள்,” என்ற பொருள்படும்படி பாடி அவளை வாழ்த்தினார். மீண்டும் அரண்மனைக்கு வந்தார்.
பாண்டியனும் அவரிடம் மன்னிப்பு கேட்டு சங்கப்பணிகளைத் துவங்குவதற்குரிய ஏற்பாடுகளை வேகமாகச் செய்தான். கணவனின் நல்வாழ்வுக்கு மனைவி உறுதுணையாக இருக்க வேண்டும். அவனுக்கு எதிர்பாராமல் கஷ்டம் வந்தால், அதனைத் தீர்க்க எவ்வளவு பெரிய சுமையையும் தாங்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்த சம்பவம்.

thanks : dinamalar

…..

This entry was posted in பாண்டியன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *