நாட்டார் அம்பலங்கள்

நாம் கண்டதேவி என்ற குக்கிராமத்தின், மிகச் சிக்கலான பின்னணியை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது…
மதுரை தேவகோட்டை சாலையில், ராம் நகரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் உள்ளே தள்ளி இருக்கிறது கண்டதேவி. இங்குள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், வரலாற்றுச் சிறப்புமிக்கதாக கருதப்பட்டு வருகிறது. அய்நூறுக்கும் குறைவான குடும்பங்களே வசிக்கும் சிறு கிராமம்தான் என்றாலும் சாதி இவ்வூருக்கு ‘சிறப்புத் தகுதியை’ பெற்றுத் தந்திருக்கிறது. முன்னூறுக்கும் மேற்பட்ட கள்ளர் குடும்பங்கள் வசிக்கும் கண்டதேவியில் பள்ளர், பறையர், நாடார், பார்ப்பனர், பிள்ளை, ஆசாரி, வேளார், வளையர் எனப் பல சாதியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றனர்.
கண்டதேவி மக்களின் முக்கியமான தொழில் விவசாயம். குறிப்பாக, தலித் மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை மய்யமாகக் கொண்டது. விவசாயம் சார்ந்த வேறு சில தொழில்களில் தலித் மக்கள் ஈடுபட்டு வந்தாலும், பொருளாதார ரீதியாக அவை பெரிதளவு உதவவில்லை.

அதே வேளை, கள்ளர்களின் வியாபாரத் தளம் மிகவும் பலமிக்கது. தேவகோட்டையில் இருக்கும் அத்தனை பெரிய கடைகளும் கள்ளர்களுக்கானது என்ற வகையில் அவர்களின் பொருளாதார நிலை பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. கண்டதேவியிலும் அதைச் சுற்றிலும் உள்ள நிலங்கள் 65 சதவிகிதத்திற்கும் மேல் கள்ளர்களிடமே இருக்கிறது. அவர்களுக்கு அடுத்ததாக தலித் மக்களிடம் 25 சதவிகித நிலங்கள் உள்ளன. நிலம் பற்றி பேசும்போது, இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்: கோயில் பெயரில் இருக்கும் சுமார் முன்னூறு ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியை இப்போது கள்ளர்கள் கையகப்படுத்தியுள்ளனர்.
விடுதலை பெற்று நம் நாடு ஜனநாயகமானதாக மாறி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் இன்னும் அங்கு ‘நாடு’ முறை நடைமுறையில் இருப்பதுதான் கண்டதேவியின் தனித்துவ பிரச்சனை
நிர்வாக  வசதிக்காக  இந்தியாவை கிராமம், பஞ்சாயத்து, ஒன்றியம், வட்டம், மாவட்டம், மாநிலம் என்று பிரித்திருப்பது போல மன்னராட்சியில் நிர்வாக வசதிக்காக, 22 1/2, 32 1/2, 42 1/2, 64 1/2, 96 1/2 என்று கிராமங்களை ஒன்றிணைத்து நாடுகளாகப் பிரித்தனர். இதற்கு வாரிசு முறையில் ஒரு அம்பலம் நியமிக்கப்பட்டிருந்தார். மன்னரின் சார்பாக வரி வசூல் செய்வதும், ஊர் பஞ்சாயத்து செய்வதும், அரசுக்கு தேவைப்படுகிறபோது படைக்கு ஆள் அனுப்புவதும் இவர்களுடைய வேலை. தலித் மக்கள் அம்பலங்களாக இருந்ததில்லை. பெரும்பாலும் கள்ளர்கள்தான்.
கண்டதேவியைச் சுற்றி உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னிலை, இரவுசேரி என நான்கு நாடுகள் உள்ளன. இந்திய துணைக் கண்ட அரசின் சமஸ்தானங்கள் இணைக்கப்பட்ட பிறகு, எல்லா பகுதிகளும் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன. ஆனாலும் விடுதலைக்குப் பிறகு காலாவதியாகிப் போன ‘நாடு’ நிறையை கள்ளர்கள் இன்னும் கைவிட்ட பாடில்லை. காரணம், அம்பலங்களாக இருந்து அனுபவிக்கும் அதிகார சுகத்தைத் துறப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. நாடு அதிகாரம் இருப்பதால், அம்பலங்கள் அரசர்களைப் போல வலம் வருகிறார்கள். அவர்களை மீறி அங்கு ஒரு அணுவும் அசையாது.
நாடு —- கூற்றம் :
தஞ்சையின் சுற்றுப்புற பகுதிகள் நாடு என்ற அமைப்பின் கீழ் நிர்வாக வசதிக்காக சோழர்கள் காலத்தில் இருந்தே இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நாடு என்ற அமைப்பில் 18 கிராமங்கள் அடங்கியது ஒரு நாடாக கருதப்படும்.
நான்கு  நாடுகள் அடங்கியது ஒரு கூற்றம் என்றும் சோழர்கள் காலத்தில் இருந்ததாக எங்கோ படித்திருக்கிறேன். இந்த நிர்வாக அமைப்பின் படி ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒன்றிலிருந்து நான்கைந்து நாட்டாமைகள் இருப்பார்கள்.அதாவது ஆதிகாலத்தில் ஒருவருக்கு மூன்று குழந்தைகள், அந்த மூவரின் குழந்தைகளுக்கு அவரவர் அப்பா நாட்டமை,அப்படியே குடும்பம் பெரிதாகி,ஊராகிவிட்டாலும் இப்போது மூன்று கரைகள், மூன்று நாட்டாமைகள்.
இந்த நாட்டாமை பதவி குடும்பத்தில் மூத்த ஆண் வாரிசுகளுக்கு சென்றுவிடும். இவர்கள் கிராமத்தில் கோவில் திருவிழா வரி வசூலிப்பது, ஊர் ஏரி குளங்களை மராமத்து செய்வது,பொதுச்சொத்துகளை பாதுகாப்பது, மற்றும் ஊரில் எழும் சிறிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பது போன்றவைகளை செய்யும் நிர்வாகிகள்.இந்த நாட்டுக்கு ஒரு பெரிய நாட்டாமை இருப்பார் இவரை நாட்டம்பலம் என்று அழைப்பார்கள்.

நாட்டுக்குள் அடங்கிய இரண்டு ஊருக்குள் பிரச்சினை என்றால் தீர்வுக்கு அம்பலங்கள் சேர்ந்து தீர்வு காண முயல்வார்கள்.எனக்கு தெரிந்தவரை இந்த நாட்டாமைகள் ஊரைவிட்டி ஒதுக்கிவைத்தல் போன்ற சினிமாவில் வரும் தீர்ப்புகள் சொல்பவர்கள் அல்ல.பிரச்சினைகளை காவல்துறை,வெட்டு குத்து என்று செல்லாமல் தடுக்கும் ஒரு நிர்வாகிகள்.
இந்த நான்கு நாடு அமைப்பில்(கூற்றம்) ஒன்று தலைநகரம் அந்த நாடு வளநாடு என்று அழைக்கப்படும் உதாரணம்- காசவளநாடு, கோநகர் நாடு, தென்னவநாடு,கீழ்வேங்கை நாடு என நினைக்கிறேன். இதில் காசவளநாடு தலைநகரம்.காசவளநாட்டைச் சேர்ந்தவர்கள் தம் ஆளுகைக்கு உட்பட்ட மூன்று நாடுகளிலும் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள்.(இப்போ ஆளுகையெல்லாம் கிடையாது)பொதுவாக திருமணங்கள் 90% அந்த நாட்டுக்குள்ளேயே முடிந்துவிடும், சில திருமணங்கள் நாடு தாண்டி நடக்கக்கூடும். இது போல நிறைய நாடுகள் உண்டு. உதாரணம்- பாப்பாநாடு,ஒரத்தநாடு,பைங்காநாடு..
இதிலும் இந்த வளநாட்டுக்காரர்கள் அறுத்துக்கட்ட மாட்டார்கள்.(கைம்பெண் மறுமணம்). மற்ற மூன்று நாடுகளில் கைம்பெண் மறுமணம் தொண்று தொட்டே உண்டு. ஒரு நாட்டுக்காரர்கள் மற்ற நாட்டுக்காரர்களின் பழக்க வழக்கங்களை நக்கல் செய்வது கலையின் ஆரம்பம் இங்கே.
நாட்டுத்திருவிழாக்கள் களைகட்டும் பெரிய திருவிழா இவை நாட்டின் தலைநகரில் இருக்கும் கோவிலில் நடக்கும், தஞ்சை மாவட்ட இளைஞர்கள் இம்மாதிரி திருவிழாவிற்கு கோவிலுக்கு செல்வர் பக்தியால் அல்ல. அங்கே வரும் இளைஞிகளை கணக்கு பண்ண.சில இளைஞிகள் விழலாம், தவறினால் இளைஞர்களுக்கு விழும்.பெரும்பாலும் இரண்டாவதே நடக்கும் ஏனென்றால் பெண்களுக்கு வரும் காவல் அப்படி இருக்கும்.மற்ற நேரங்களில் கோவிலில் சீட்டு விளையாட செல்லுவார்கள்.
மேலே சொன்ன அனைத்தும் ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே பொருந்தும். மைனாரிட்டி ஜாதியாக இருந்தால் அவர்களுக்கும் ஒரு அம்பலம் இருப்பார்,பெரும்பாலான கோவில்களில் அவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்படும், தேங்காய் மூடியும் வாழைப்பழமும்தான்.பெரும்பாண்மை சாதியிலும் வீட்டோட மாப்பிள்ளையா வந்து குடியேறுபவர்களுக்கு தேங்காய் மூடி கிடைக்க வாய்ப்பே இல்லை.ஏனென்றால் இவர்கள் அந்த ஊரின் வந்தேரிகள்.).
ஜாதியின் வீரியம் குறைந்து காணப்பட்டாலும் அந்த கட்டமைப்பு இன்னும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.அந்த கட்டமைப்பில் சட்டம் போட்டு ஒழிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் பொருளாதார/வழிபாட்டு உரிமை கொண்டு வர முடியும் அதற்கான பதிவை பின்னர் எழுதுகிறேன். சாதிசூழ் உலகு என்ற பெயரில் பதிவர் நடைவண்டியின் பதிவு தெளிவாக உள்ளது,எனக்கு சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் அந்த பதிவில் உள்ளதில் பெரும்பாண்மை மறுக்கமுடியாது.
ந்தியா, இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா… இதெல்லாம் நாடுகள் என்று தெரியும். கப்பலூர், உஞ்சனை, கோனூர்.. போன்ற பெயர்களிலும் ‘நாடுகள்’ இருக்கின்றன என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கக்கூடும். ஆனால் உண்மை. தமிழகத்தின் பல பகுதிகள் நாடுகளாக பிரிவுற்றிருக்கின்றன. இது நண்பர்கள் பலருக்குப் பழைய செய்தியாகக்கூட இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும், ஒரு ஆவணப்படுத்தும் முயற்சியாகவுமே இந்தக் கட்டுரை.
ஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம், வடுவூர் பகுதியில் அமைந்திருக்கிற கிராமங்கள் அனைத்தும் ‘நாடு’ என்ற கட்டமைப்புக்குள் உள்ளடங்கி வருகின்றன.
பதினெட்டு அல்லது அதை ஒட்டிய எண்ணிக்கையில் அமைந்த கிராமங்கள், ஒரு நாடாக கருதப்படுகிறது.

உதாரணமாக காசவளநாடு என்ற நாட்டிற்குள், பஞ்சநதிகோட்டை, தெக்கூர், புதூர், கோவிலூர், நெல்லுபட்டு, ஆழிவாய்க்கால், காட்டுக்குறிச்சி, கொல்லாங்கரை, வேங்குராயன்குடிகாடு, ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை, நடுவூர், விளார், கண்டிதம்பட்டு, சாமிப்பட்டி… இப்படி நிறைய கிராமங்கள் உண்டு. இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தாங்கள் இன்ன நாட்டுக்கு உட்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்தும்விதமாக தங்கள் ஊருக்கு முன்பு, தங்கள் நாட்டுப் பெயரில் முதல் எழுத்தைப் போட்டுக்கொள்வார்கள்(உ-ம்: கா.புதூர்).
இதே போல கீழ்வேங்கை நாடு, சுந்தரவளநாடு, கோனூர் நாடு.. ஏராளமான நாடுகள் உண்டு. இந்த நாடுகளுக்கு, அதற்குள் அமைந்த ஏதாவது ஒரு கிராமம் தலைமை கிராமமாக இருக்கும். அந்த ஊரில் அந்த நாட்டுக்கென்று ஒரு கோயில் இருக்கும். இந்த நாட்டுக்கோயில்களுக்கு வருடம் ஒருமுறை ஏதாவது ஒரு விழா நாளில் திருவிழா நடக்கும்.

அந்த நாட்டுக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து காவடி, பால்குடம் எடுத்து, பல கிலோமீட்டர் தூரம் தூக்கிவருவார்கள். பக்கத்து ஊர்க்காரனை விட சிறப்பாக செய்ய வேண்டும் என்று எல்லா வருடமும், எல்லா ஊர்க்காரர்களும் போட்டி போடுவார்கள். நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு மக்களெல்லாம் திருவிழா பார்க்க வருவார்கள். ஒரு வெட்டுக்குத்தாவது இல்லாமல் எந்த திருவிழாவும் முடியாது. இப்போதும் எல்லாம் நடக்கத்தான் செய்கிறது. மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை குறைந்து கார், டூ வீலர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.. அவ்வளவே.
‘ஒவ்வொரு நாட்டுக்கென்றும் ஒரு நாட்டாமை இருப்பார், ஒரு கிராமத்துப் பிரச்னை அவர்களுக்குள் தீர்க்க முடியாமல் கைமீறி போனதென்றால், அந்த நாட்டாமை தலையிட்டு தீர்த்து வைப்பார், அவரது சொல்தான் இறுதி தீர்ப்பு’ என்று ஒரு தலைமுறைக்கு முன்பிருந்த நடைமுறையை, இப்போதும் பெருசுகள் பேசிக்கொள்வார்கள். இம்மாதிரியான நாட்டாமை நடைமுறைகள் இப்போதில்லை எனினும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுடன் திருமண உறவுகள் வைத்துக்கொள்வதில்லை என்பதுபோன்ற விதிகள், 90 % ஏற்பாட்டுத் திருமணங்களில் கடைபிடிக்கத்தான்படுகின்றன.
இந்த நாடு என்ற அமைப்பு, கிராமங்களை ஒன்றிணைக்கும் நிர்வாக அமைப்பாக இருந்தாவெனத் தெரியவில்லை.. ஆனால், சாதியைக் கட்டிக்காக்கும் சாதனமாக இருந்திருக்கிறது/ இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

நாட்டுக்கோயில்களுக்கு திருவிழா சமயத்தில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காவடி, பால்குடம் எடுத்துச் செல்வார்கள் என்று பார்த்தோம் இல்லையா..? அதற்காக ஊரெங்கும் ஒரு வீடுவிடாமல் வரி வாங்குவார்கள். குறிப்பிட்ட ரூபாய் அல்லது அதற்கு இணையான அளவில் நெல் என்ற அந்த வரி, எந்த கிராமத்திலும், தலித்துகளிடம் வாங்கப்படுவதில்லை. ஒரு கிராமம் முழுக்க தலித்துகள் வசிக்கிறார்கள் என்றால், அந்த நாட்டுக்கு உட்பட்ட கிராமங்களின் எண்ணிக்கையில் அந்த தலித் கிராமங்களை சேர்க்கவே மாட்டார்கள். உதாரணமாக தெற்கு நத்தம், நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் முழுக்கவே வசிப்பது தலித்துகள்தான். ‘காசவளநாட்டு’ கணக்கில் அவற்றை காண முடியாது.
நாடு என்னும் கட்டுமானம் அமைந்திருக்கும் கிராமங்களில் பெரும்பான்மையாக இருப்பது கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்களே. இவர்கள், தங்கள் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எல்லா காலங்களிலும் இந்த அமைப்பை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பழைய சட்டத்திட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டாலும் தலித்துகளுக்கு எதிரான சமயங்களில் மட்டும் எல்லோருக்கும் சட்டென ‘நாட்டு’ப்பற்று வந்துவிடுகிறது.
ஏதாவது ஒரு கிராமத்தில் தலித்துகளுக்கும், கள்ளர் சாதியினருக்கும் பிரச்னை என்று வந்துவிட்டால் முதலில் அவர்கள் செய்வது, ‘இனிமேல் தலித்துகளுக்கு உள்ளூரில் வேலை கிடையாது’ என்று தடை விதிப்பதுதான். வேறு வழியின்றி பக்கத்து ஊர்களுக்கு வேலைக்குப்போனால் அங்கும்போய், ‘ஒரு நாட்டுக்காரன்.. நீங்களே இப்படி செய்யலாமா..?’ என்று ‘நியாயம்’ கேட்டு, அந்த நாட்டுக்குட்பட்ட எந்த கிராமங்களிலும் அவர்களுக்கு வேலை கிடைக்காதபடி செய்தால்தான் அவர்களுக்கு நிம்மதி. பொருளாதார ரீதியாக கள்ளர்களின் வயல்களில் விவசாயக்கூலிகளாக இருக்கும் தலித்துகளால் வேறெதுவும் செய்ய இயலாது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றியிருக்கும் பகுதியில் இந்த நாட்டமைப்பு இப்போதும் முழு அளவில் உயிரோடு இருக்கிறது. உஞ்சனை நாடு, கப்பலூர் நாடு, அஞ்சுக்கோட்டை நாடு, செம்பொன்மாற்றி நாடு, இரவுச்சேரி நாடு.. என்று இந்தப்பகுதி முழுக்கவே நாடுகளாக பிரிவுற்றிருக்கின்றன. தஞ்சையைப் போலல்லாமல் இங்கு, பதினேழரை கிராமங்கள், இருபத்தி இரண்டரை கிராமங்கள் என்று விநோதமான நில அமைப்பில் நாடுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு நாட்டுக்கான தலைவரையும் ‘நாட்டு அம்பலம்’ என்றழைக்கிறார்கள். திருவாடனை தொகுதியின் நடப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராமசாமிதான் இப்போதைய கப்பலூர் நாட்டுக்கான நாட்டம்பலம் (இதற்கு முன்பு இவரது அப்பா நாட்டம்பலமாக இருந்தார்). அந்த நாட்டுக்குட்பட்ட கிராமங்களின் பிரச்னைகளுக்கு நாட்டம்பலம் சொல்வதே இறுதி தீர்ப்பு. அதை மீறினால் ஊரைவிட்டுத் தள்ளி வைப்பது மாதிரியான நடைமுறைகள் இப்போதும் உயிருடன் இருக்கின்றன.
கண்டதேவி தேரோட்டத்தின்போது தலித்துகளை வடம் பிடிக்கக்கூடாது என்று ஏழரை பண்ணும் கண்டதேவி கிராமம் அமைந்திருப்பது உஞ்சனை நாட்டுக்குள். அந்த சமயத்திலெல்லாம் உஞ்சனை நாட்டு சார்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது இந்த நாட்டம்பலம்தான். பெரும்பான்மை கள்ளர்களும், தலித்துகளும், உடையார்களும் வசிக்கும் இந்த தேவக்கோட்டை வட்டார நாட்டு அமைப்புகளின் நாட்டம்பலமாக கள்ளர் சாதியினர் மட்டுமே வர இயலும்.
இந்த நாட்டமைப்பு செய்த சாதி காக்கும் பணியை தென்பகுதியில் பழைய காலத்தில் செய்தவர்கள் பாளையக்காரர்களும், ஜமீன்களும்.

இவை இரண்டும் வரி வசூலுக்காக ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றாலும், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதி காக்கும் பணியையும் செய்து வந்திருக்கின்றன. கடம்பூர் ஜமீன், நெற்கட்டும்செவல் ஜமீன், சுரண்டை ஜமீன், வீரகேரளம் புதூர் ஜமீன், ஊத்துமலை ஜமீன் (இவை அனைத்திலும் அதிகாரம் செலுத்தியவர்கள் தேவர்கள்..) என்பதாக தெற்கே இருக்கும் இவற்றிற்கு, நாட்டமைப்பு அளவுக்கு நடைமுறையில் இப்போது உயிரில்லை. பெயருக்கு மட்டும் ஜமீன் குடும்பங்கள் இருக்கின்றன. தேனி மாவட்டத்தின் கண்டமனூர் ஜமீனும், பழநிக்கு அருகேயிருக்கும் நெய்காரப்பட்டி ஜமீனும் கிட்டத்தட்ட இல்லாதொழிந்துவிட்டன.
நாடு என்கிற உட்பிரிவு தோன்றுவதற்க்கு கொஞ்சம் பின்னோக்கி பார்க்க வேண்டும். நாம் நம்முடைய தலைமுறையில் சாதிய கட்டுமானத்தை தாங்கிப்பிடிப்பது நாட்டு பஞ்சாயத்துக்கள் என்று பார்த்து வளர்ந்திருந்தாலும்.
இந்த அடுக்குமுறை சமூக அமைப்பை எப்படி உருவாக்கினார்கள்? யார் உருவாக்கினார்கள்? என்ற கேள்விக்கு விடை தேட வேண்டிய அவசியம் இருக்கிறது. வாடியக்காடு ஜமீன் (அ) மதுக்கூர் ஜமீன் என்ற அமைப்பில் தற்போதைய மதுக்கூர் ஓன்றியத்தின் பெரும்பாலான கிராமங்கள் இருந்தன. அந்த ஜமீனை எதிர்த்து தான் “வாட்டாக்குடி இரணியன்” போராடினார்.

ஆனால் ஓர் உண்மையை நாம் மறந்து விடுகிறோம் அந்த ஜமீனின் சாதிய கட்டுமானத்திற்க்கு தூபம் போட்டது யார்? மன்னாங்காடு ஐயர் அல்லவா!
பின்னாளில் ஜமீன் முறை ஓழிந்து முசுறி நாடு உருவான பின்பும் மன்னாங்காடு ஐயரின் ஆதிக்கம் இருந்ததே. அவரை ஓடுக்கி பட்டுக்கோட்டைக்கு நகர்த்தி பின்பு பட்டுக்கோட்டையிலிருந்தும் வெளியேற்றியது திராவிட இயக்கத்தின் வெற்றியல்லவா!
இப்படி பாப்பாநாடு ஜமீன், அதற்க்கு கொட்டை தாங்கிய ஐயர். அவற்றை விட்டுவிட்டு நேரிடையாக பார்க்கப்போனால் சாதிய கட்டுமானம் ஏதோ கள்ளர்கள் உருவாக்குவது போல தெரியும்.
பார்ப்பனர்கள் ஆங்கிலேயர் ஆட்சி வரைக்கும் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதையும், பின்னாளில் திராவிட இயக்கத்தால் அவர்கள் ஓடுக்கப்பட்டதையும் கணக்கில் எடுத்துக்கொண்டே தஞ்சை மாவட்டத்தின் சாதிய கட்டுமானத்தை அணுக வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.
எம்.எம்.அப்துல்லா said…

காசாநாட்டுக்காரர்கள் அறுத்துக் கட்டும் பழக்கம் இல்லாமல் இருப்பது ஆச்சர்யம்தான். இந்த பெரும்பான்மை சமூகத்தில் பிறநாட்டுக்காரர்கள் போருக்குச் செல்ல இந்த உட்பிரிவு மட்டும் போரில் பங்கு கொள்ளாமல் உள்ளூர் நிர்வாகம்,உள்ளூர்காவல் போன்ற பணிகளை மட்டுமே செய்திருப்பார்கள். எனவே இளம் வயதில் மரணம் என்பது இந்த நாட்டுக்காரர்களிடையே இல்லாமல் இருந்திருக்கும்.அதுகூட அறுத்துக்கட்டும் பழக்கம் ஏற்படாததற்குக் காரணமாக இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கணிப்பும்,கருத்தும்.

நாடோடி இலக்கியன் said…

ஆழியூரான்! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நாடுகளில் ஒன்றான கோனூர் நாட்டில் கள்ளர் சாதியினர்தான் பெரும்பான்மையினர்,ஆனால் நீங்கள் சொல்வது போல் அவர்கள் தலித்துகளை அடக்கி வைப்பதெல்லாம் இல்லை.தலித் வீட்டிற்குச் சென்று கள்ளர் வீட்டு குழந்தைகள் டீயூசன் படிக்கிறார்கள்,தலித் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்கள் ,வசதி படைத்த தலித் நிலத்தில் உயர் சாதியை சார்ந்த கூலித்தொழிளாலிகள் வேலை செய்வதெல்லாம் இப்போ சாதாரணமாகிவிட்டது.நீங்கள் குறிபிடுவது போல் கள்ளர் அதிகம் இருக்கிறார்களே தவிர ஆதிக்கமெல்லாம் செலுத்துவதில்லை.இதை ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் பதிவில் கள்ளர்கள், சாதி வெறியர்கள் போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.
நன்றி:மாயன் தேவர்

This entry was posted in கள்ளர், தேவர் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *